தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.
இதனிடையே இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக வட கொரியாவில் தற்போதுள்ள அரசை கவிழ்க்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிப்பதாகவும், ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் வட கொரியா நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வட கொரியாவுடனான கடல் எல்லை பிரச்னை உள்ள இடத்தின் அருகே சுமார் 1,200 டன் எடைகொண்ட தென் கொரிய ரோந்து கப்பல் ஒன்று , 104 பணியாளர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூழ்கியது.
இது குறித்த தகவலறிந்ததும் மீட்பு படையினர், உடனடியாக விரைந்து சென்று 58 பேரை மீட்டனர். ஆனால் 40 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தங்களது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வட கொரியா காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்